செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி

Published On 2017-09-21 08:25 GMT   |   Update On 2017-09-21 08:25 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். மேலும், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 7 பேரும், பொதுமக்களில் 10 பேரும் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் போலீசார் சென்ற வாகனத்தை குறிவைத்து கையெறி குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். மேலும், பொதுமக்களில் 10 பேரும், சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் 7 பேரும் காயம் அடைந்தனர். சக போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த ஜம்மு-காஷ்மீர் பொதுப்பணித்துறை அமைச்சர் அக்தர் இந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் எஸ்.எஸ்.பி. தலைமை காவலர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News