செய்திகள்
10 கிலோ கடத்தல் தங்கத்துடன் எகிப்து நாட்டுக்காரர் டெல்லியில் கைது
மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்திவந்த எகிப்து நாட்டுக்காரரை டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திவருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதையடுத்து அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், துபாயிலிருந்து இருந்து டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, தனது உடைக்குள் ரகசிய பாக்கெட்களை தைத்து 13 தங்க கட்டிகள் கடத்திவந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர். அவர் கடத்திவந்த தங்கத்தின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 3.03 கோடி ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.