செய்திகள்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் மீது மீண்டும் தாக்குதல்

Published On 2017-09-19 13:56 GMT   |   Update On 2017-09-19 13:56 GMT
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால், மட்டானூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
கன்னூர்:

கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இடையில் மோதல் சற்று குறைந்து அமைதியான சூழல் நிலவிய நிலையில், கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து மோதல் ஏற்படுகின்றன. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கடும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், கன்னூர் மாவட்டம் மட்டானூர் அருகே உள்ள நெல்லுனியில் இன்று ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். நெல்லுனியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டரான நிகில்(19), இன்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வாளால் வெட்டியுள்ளனர். இதில், கை கால்களில் பலத்த காயமடைந்த அவர் தலசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News