செய்திகள்

குஜராத் கலவர வழக்கு: அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அமித்ஷா ஆஜர்

Published On 2017-09-18 07:37 GMT   |   Update On 2017-09-18 07:37 GMT
குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஆஜரானார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் 2002-ல் மூண்ட கலவரத்தில் நரோடா காம் என்ற இடத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அப்போது முதல் மந்திரியாக இருந்த மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களில் ஒருவரான மாயா கோட்னானி பெயரும் இடம்பெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையில் ஆஜரான மாயா கோட்னானி, தனக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் மருத்துவமனைக்கு வந்த உடல்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் அமித்ஷாவும் இருந்தார். அவரது வாக்குமூலத்தை கேட்டால் உண்மை நிலை தெரிய வரும் என தெரிவித்தார்.

இதையடுத்து, செப்டம்பர் 18-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் அமித்ஷாவுக்கு என சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று காலை ஆஜரானார். நீதிபதி பி.பி.தேசாய் முன்னிலையில் ஆஜரான அமித்ஷா சாட்சியம் அளித்தார். அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து புறப்பட்டு சென்றார்.

ஏற்கனவே, குஜராத் கலவரத்தின் போது நரோடா பாட்யா என்ற இடத்தில் நடைபெற்ற கவலரத்தில் 97 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News