செய்திகள்

பெண்ணை அவமதித்த குற்றத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்: மும்பை நீதிமன்றம் நூதன உத்தரவு

Published On 2017-09-04 10:54 GMT   |   Update On 2017-09-04 10:55 GMT
பெண்ணை அவமதிக்கும் வகையில் தரக்குறைவாக பேசிய நபருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் நீதிமன்றம் கலையும் வரை அங்கேயே அமர்ந்திருக்க வேண்டும் எனவும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தம்பதியர், கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி காலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

அதே குடியிருப்பை சேர்ந்த சுதிர் என்பவர் அங்குள்ள குப்பைத் தொட்டியில் குப்பை கொட்ட வந்தார். அந்த நேரத்தில் குப்பை கொட்டும் வாளி கைதவறி வீடு திரும்பி கொண்டிருந்த அந்த தம்பதியர் மீது விழுந்தது.

அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுதிர் அந்த பெண்ணை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து, அவர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தொடர்பான விசாரணை
நடந்து வந்தது.

இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், மனுதாரர் மீது சுதிர் குப்பை கொட்டியதுடன், அவரை இந்தியில் திட்டியுள்ளார். அந்த வார்த்தைக்கு சமமான ஆங்கில வார்த்தை இல்லை. பொதுவாக, இந்த வார்த்தை பெண்களை அவமதிக்கும் வகையில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த வார்த்தையால் மனுதாரர்
மனதளவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். எனவே மனுதாரரை அவமரியாதையாக பேசிய குற்றத்துக்காக சுதிர் ஒரு ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். மேலும், நீதிமன்றம் கலையும் வரை அவர் நீதிமன்றத்திலேயே காத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News