செய்திகள்

பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு: அமைதி காக்குமாறு ஆதரவாளர்களுக்கு சாமியார் பாபா ராம் ரஹீம் வேண்டுகோள்

Published On 2017-08-25 00:55 GMT   |   Update On 2017-08-25 00:55 GMT
பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தனது ஆதரவாளர்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா ராம் ரஹீம் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தனது ஆதரவாளர்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா ராம் ரஹீம் வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002ம் ஆண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீண்ட காலம் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த தீர்ப்பு சாமியாருக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் (15,000 வீரர்கள்) குவிக்கப்பட்டுள்ளனர். மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாபா ராம் ரஹீமின் வீடியோ ஒன்று வெளியானது. அதில், தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராம் ரஹீம் கூறுகையில், நாம் அனைவரும் சட்டம்-ஒழுங்கை மதிக்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட வேண்டும். பஞ்ச்குலாவில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News