செய்திகள்
துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இன்று இணைந்தன. இதனையடுத்து அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர், நிதி அமைச்சர் பதவியும், பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறையும் வழங்கப்பட்டது.
மாலை 4.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜன் இருவருக்கும் தமிழக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் இருவரும் தலைமைச் செயலகத்தில் வந்து பொறுப்பேற்று கொண்டனர்.
இந்நிலையில், துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாடு வருங்காலத்தில் நல்ல முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.