மோடிக்கு நல்ல எண்ணம் கொடுக்க வேண்டி யாகம்: டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்
புதுடெல்லி:
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 35 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
36-வது நாளான இன்று ஈஸ்வரனை வேண்டி மோடிக்கு நல்ல எண்ணம் கொடு என்று யாகம் வளர்க்கும் போராட்டம் நடந்தது. மத்தியில் ஆளும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகளை பற்றியும், விவசாயத்தை பற்றியும் நல்ல எண்ணம் வேண்டியும்,
விவசாயிகளின் கோரிக்கையான விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கும் வரை அனைத்து வங்கிகளும் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டியும்,
இந்திய நதிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தரவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் அனைவருக்கும் காப்பீடு வழங்க வேண்டும்,
நெடுவாசல், கதிராமங்கலம், வடகாடு, நல்லாண்டர் கொல்லை போன்ற ஊர்களில் விவசாய நிலங்களை அழித்து கொண்டிருக்கும் ஐ.ஓ.சி. நிறுவனத்தை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் மோடிக்கு நல்ல எண்ணத்தை கொடுத்து செயல்படவைக்க வேண்டும் என்று ஈஸ்வரனை வேண்டி யாகம் செய்தனர்.
முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மாந்தர் வீதியில் காலை ஊர்வலம் நடந்தது. இதில் அய்யாக்கண்ணு உள்பட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்.