search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுவாசல்"

    கஜா புயல் காற்றால் பல்வேறு திசைகளில் பறந்து சென்ற 50 சதவீதம் வவ்வால்கள் மீண்டும் ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளதால் நெடுவாசல் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #GajaCyclone #Bats
    புதுக்கோட்டை:

    கஜா புயலின் பாதிப்பு மனிதர்களை மட்டுமின்றி விலங்குகள், பறவைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. இயற்கை சீற்றத்தை முன் கூட்டியே அறியும் திறன் கொண்ட அவை பல இடங்களில் பலியாகியும், சில இடங்களில் மறுவாழ்வும் பெற்றுள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் சுமார் 3 ஏக்கரில் சுற்றிலும் புதர்ச்செடிகள் சூழ, அதன் நடுவில் படர்ந்து விரிந்த ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கிளைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் வசித்து வருகின்றன. அந்த ஆலமரத்தின் அடியில் அய்யனார் கோவில் உள்ளது.

    இந்த மரத்தில் இருந்து ஒடிந்து விழும் ஒரு குச்சியை கூட யாரும் விறகுக்காக தொடுவது இல்லை. அதே போல் இந்த மரத்தில் உள்ள வவ்வால்களை யாரும் வேட் டையாடுவதும் இல்லை. இங்கிருந்து இரை தேடி எவ்வளவு தொலைவுக்கு வவ்வால்கள் சென்றாலும் மீண்டும் இதே இடத்திற்கு வந்து விடுவது வழக்கம்.

    அதிகாலையில் இவை எழுப்பும் சப்தத்தைக் கேட்டு தான் ஊரே எழும். இந்த வவ்வால்கள் நலன் கருதி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடிப்பது கிடையாது.



    இந்நிலையில் கஜா புயலின் தாக்குதலால் இந்த ஆலமரத்தின் பெரும்பாலான கிளைகள் முறிந்து விட்டன. புயல் காற்றால் 50 சதவீதம் வவ்வால்கள் இந்த மரத்தில் இருந்து எங்கெங்கோ சென்று விட்ட நிலையில் மீதமிருந்த வவ்வால்கள் இறந்து விட்டன.

    10 நாட்கள் ஆகி சற்றே இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து பல்வேறு திசைகளில் பறந்து சென்ற வவ்வால்கள் மீண்டும் இந்த ஆலமரத்துக்கு திரும்ப தொடங்கி உள்ளன. அந்த மரத்தில் எஞ்சியுள்ள கிளைகளிலும், குச்சிகளிலும் தங்கியுள்ளன.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் கூறுகையில், இம்மரத்தில் இருந்த பாதி வவ்வால்கள் புயல் காற்றால் இறந்து மரத்தடியிலேயே விழுந்து விட்டன. இங்கிருந்து வெளியேறிய சில நாட்கள் வேறு எங்கோ வசித்த வவ்வால்கள் எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் இந்த மரத்துக்கே வந்திருப்பது பிரிந்து சென்ற சொந்தங்கள் எங்களை மீண்டும் பார்க்க வந்தது போல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    அதே சமயம் புயலால் இப்பகுதியில் இருந்த பழத் தோட்டங்கள் முழுமையாக அழிந்துவிட்ட நிலையில் இந்த வவ்வால்கள் கடந்த ஒரு வாரமாக பட்டினியால் வாடுவதுதான் எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றார்.  #GajaCyclone #Bats


    தொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. #HydrocarbonProject
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கான அனுமதியை ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வழங்கியது.

    இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர்.

    இந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறியிருந்தனர்.

    இந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று 180 நாட்களுக்குள் அதனை தொடங்கவேண்டும் என்று சட்டவிதிகள் உள்ளது.

    ஆனால் தற்போது வரை அந்த திட்டம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்களின் தொடர் போராட்டங்கள் திட்டம் தொடங்க காலதாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


    எனவே ஜெம் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு தங்களுக்கு நெடுவாசலை தவிர்த்து வேறு இடம் வழங்க வேண்டும் என்று மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு பதில் கூற தொடர்ந்து அந்த அமைச்சகம் காலதாமதம் செய்ததும் காரணமாக கூறப்படுகிறது.

    மேலும் தமிழக அரசும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய குத்தகையை தங்களுக்கு மாற்றித்தர இழுத்தடிப்பு செய்து வருவதால் தங்கள் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசல் கிராமத்தில் கைவிட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும், தமிழர் நலன் பேரியக்க பொதுச்செயலாளருமான பழ.திருமுருகன் கூறியதாவது:-

    நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அனுமதியை ஜெம் நிறுவனத்திற்கு வழங்கிய மத்திய அரசு, 180 நாட்கள் ஆகியும் திட்டத்தை தொடங்காததால் அனுமதியை ஏற்கனவே ரத்து செய்து விட்டது. அதன்பிறகு அதே மத்திய அரசு சர்வதேச அனுமதியை வழங்கியுள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை தொடங்கலாம். எனவே ஜெம் நிறுவனம் திட்டத்தை கைவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறது.

    மத்திய அரசின் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும். நாளை மறுநாள் (12-ந்தேதி) நெடுவாசலில் ஆலோசனை கூட் டம் நடத்தி அடுத்த கட்ட தொடர் போராட்டம் குறித்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #HydrocarbonProject
    ×