செய்திகள்

திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ரூ.20 ஆயிரம் மோசடி

Published On 2017-08-19 05:40 GMT   |   Update On 2017-08-19 05:40 GMT
திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக பக்தரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவிலில் வி.ஐ.பி. தரிசனம், இலவச தரிசனம், ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றன. பெரும்பாலும் தரிசன கட்டணங்கள் ஆன்லைன் மூலமே விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் பெத்தபள்ளியை சேர்ந்த ஏமந்த்குமார் கவுதம் என்பவர் குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தார். அவர் திருமலை- திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி அலுவலகத்துக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்க வந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த ஒரு நபர் நான் உங்களுக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டை உடனடியாக வாங்கி தருகிறேன் என்று கூறி ஏமந்த்குமார் கவுதமிடம் ரூ.20 ஆயிரம் வாங்கிக் கொண்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ஏமந்த்குமார் கவுதம் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானவற்றை பார்த்தனர். அதில் ஒரு வாலிபர் பணத்தை வாங்கி செல்வது தெரிய வந்தது.

அதனை வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் திருமலை மற்றும் திருப்பதியில் தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ரூ.20 ஆயிரம் மோசடி செய்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News