செய்திகள்

நீட் அவசர சட்டம்: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2017-08-17 05:59 GMT   |   Update On 2017-08-17 05:59 GMT
தமிழக அரசு கொண்டு வர உள்ள நீட் அவசர சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.



இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வை விரைவில் நடத்தக்கோரி நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியது.

விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் மருத்துவ கலந்தாய்வு நடத்த தமிழகத்திற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. மேலும், குறித்த காலத்திற்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்காவிட்டால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அகில இந்திய கோட்டாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.



இதையடுத்து, தமிழக அரசு கொண்டு வர உள்ள நீட் அவசர சட்டம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் நேரில் ஆஜராகி விளக்கம தரவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News