செய்திகள்

மேற்கு வங்கத்தில் கொடூரம்: பணத்தகராறில் தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன்

Published On 2017-08-06 02:28 GMT   |   Update On 2017-08-06 02:29 GMT
மேற்கு வங்க மாநிலத்தில் மரங்களை விற்று வந்த பணத்தில் தனது பங்கை தரமறுத்த 70 வயது தந்தையை மகன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் நாய்டா மாவட்டத்தின் ராபான்பர் கிராமத்தை சேர்ந்தவர் பைத்யநாத் பிஸ்வாஸ்(70). இவரது மனைவி சரஸ்வதி, இவருக்கு அபோத் மற்றும் சுபோத் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையே, பைத்யநாத் தனக்கு சொந்தமான சில வகையான மரங்களை விற்றுள்ளார். அதில் அவருக்கு 90,000 ரூபாய் பணம் கிடைத்தது. அந்த பணத்தில் இருந்து தனது பங்குத்தொகை பணத்தை கேட்டு அபோத் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பைத்யநாத் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அபோத், தூங்கி கொண்டிருந்த பைத்யநாத் மீது சிறிதும் கருணையின்றி பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துள்ளார்.

இதில் அலறித் துடித்த பைத்யநாத்தை காப்பாற்ற முயன்ற சரஸ்வதி மீது தீ பற்றியது. சரஸ்வதியை காப்பாற்ற முயன்ற அபோத்தும் தீக்காயம் அடைந்தார். மூவரது அலறல் சத்தம் கேட்டு மற்றொரு மகனான சுபோத், அவர்கள் அனைவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தீக்காயம் முற்றிய நிலையில் பைத்யநாத் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சுபோத் கொடுத்த புகாரின் பேரில் ரானாகட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News