செய்திகள்

மேலும் 5 நடிகைகளை கடத்தி பாலியல் தொல்லை: பல்சர் சுனில் மீது புதிய புகார்

Published On 2017-07-23 13:57 GMT   |   Update On 2017-07-23 13:57 GMT
பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேலும் 5 நடிகைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்சர் சுனில் மீது புதிய புகார் எழுந்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ரவுடி பல்சர் சுனில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதாக நடிகர் திலீப்பும் கைதாகி உள்ளார். தற்போது இவர்கள் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரவுடி பல்சர் சுனில் பற்றி போலீசார் நடத்தி வரும் விசாரணையில், தினமும் புதிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு மூத்த மலையாள நடிகை ஒருவரை ரவுடி பல்சர் சுனில் ஆள் மாறாட்டத்தில் கடத்திய தகவல் முதலில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மேலும் 5 நடிகைகளை பல்சர் சுனில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவர் தமிழ் படத்தில் நடிப்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்ற போது அவரை பல்சர் சுனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார் முதலில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையை இதுபற்றி புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர், அதுபற்றி புகார் செய்ய மறுத்து விட்டார். மலையாள திரையுலக முக்கிய பிரமுகரிடம் இருந்து வந்த மிரட்டல் காரணமாகவே அவர், அப்போது புகார் செய்யவில்லை.

தற்போது அவர், தனக்கு நடந்த கொடுமை பற்றி போலீசில் வாக்குமூலம் அளிக்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப்போல மேலும் 4 நடிகைகளும் பல்சர் சுனிலால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்கள் யார்? என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News