செய்திகள்
காஷ்மீரில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உமர் அப்துல்லா
காஷ்மீரில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ராணுவத்தினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் கண்டேர்பால் மாவட்டத்தின் கண்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் போலீசார் தாக்கப்பட்டனர். அருகாமையில் உள்ள ராணுவ முகாமிலிருந்து கூடுதலான ராணுவ வீரர்கள் கண்ட் காவல்நிலையம் சென்று மீண்டும் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற போலீசாரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு போலீசார் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
ராணுவத்தினரின் இந்த செயலுக்கு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து போலீசார் மீது ராணுவத்தினர் எதற்காக தாக்குதல் நடத்த வேண்டும்? இச்சம்பந்தம் தொடர்பாக அதிகாரிகள் தகுந்த விளக்கம் அளித்து சம்பந்தப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.