செய்திகள்

3,500 சிறார் ஆபாசப்பட இணையத்தளங்கள் முடக்கம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Published On 2017-07-14 08:18 GMT   |   Update On 2017-07-14 08:18 GMT
இந்தியாவில் வெளியாகிவந்த 3,500 சிறார் ஆபாசப்பட இணையத்தளங்களை முடக்கியுள்ளோம் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உலகம் முழுவதும் சிறுவர், சிறுமியர்களை வைத்து ஆபாசப்படங்களை தயாரித்து அவற்றை இணையத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு பல நாடுகள் முறையான அனுமதி கொடுத்துள்ளன. ஆனால், இதுபோன்ற இணையத்தளங்களுக்கு தடை விதித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இதற்கிடையே, சிறார் ஆபாசப்பட இணையத்தளங்களில் வெளியிடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, மத்திய அரசு நடவடிக்கை என்ன? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நபர் கொண்ட பெஞ்ச் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜராகி பதிலளித்த கூடுதல் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், கடந்த மாதம் மட்டும் 3,500 சிறார் ஆபாசப்பட இணையத்தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும்,  பள்ளி பேருந்துகளில் ஜாமர் வசதி பொருத்துவது சாத்தியமல்ல. பள்ளி வளாகங்களில் ஆபாசப்படங்கள் பார்ப்பதை தடுக்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தலாமா? என்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு சி.பி.எஸ்.இ. கல்வித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விளக்கத்தை ஏற்றுகொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக இரண்டு நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுகொண்டுள்ளனர்.
Tags:    

Similar News