செய்திகள்

விவசாயிகள் கடன் தள்ளுபடி உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால தடை பெற்றது தமிழக அரசு

Published On 2017-07-03 07:48 GMT   |   Update On 2017-07-03 07:48 GMT
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்போரின் விவசாய கடனை தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் 5 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்கள் வைத்து இருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிறு-குறு என பாகுபாடு காட்டாமல் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன், நகை கடன் என அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.


இந்த மனுவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் கோர்டு தலையிட முடியாது. இதனால் இந்த உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
Tags:    

Similar News