செய்திகள்

இரட்டை இலை வழக்கு: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு மே 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Published On 2017-04-28 13:23 GMT   |   Update On 2017-04-28 13:23 GMT
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுப்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திர சேகரை மே 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. அம்மா அணிக்கு பெற்றுத் தருவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர பேரத்தில் ஈடுபட்டதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ந்தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.  அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் இன்று முடிவடைந்தது. இதையடுத்து சுகேஷ் சந்திரசேகரை டெல்லி தீஸ் ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சுகேஷ் சந்திர சேகரை மே 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேசமயம் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்ட ஹவாலா ஏஜெண்ட் நரேசும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இரண்டு நாட்கள் (30-ம் தேதி வரை) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News