செய்திகள்

உ.பி: சட்டவிரோத இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்துள்ளதை கண்டித்து விற்பனையாளர்கள் போராட்டம்

Published On 2017-03-27 09:46 GMT   |   Update On 2017-03-27 09:46 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் இறைச்சி வெட்டும் கடைகளை அரசு சீல் வைத்துள்ளதை கண்டித்து இறைச்சி விற்பனையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேச புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள யோகி ஆதித்யநாத் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் மாடுகளை வெட்டும் இடங்களை மூடுவதற்கு ஏற்கனவே உத்தரவிட்டார். மேலும் அரசின் அனுமதி பெறாத ஆடு- கோழி வெட்டும் இறைச்சி கூடங்களையும் அவர் மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தார்.

உத்தர பிரதேசத்தில் பல இடங்களில் அனுமதி பெறாமலேயே இறைச்சி கூடங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றை எல்லாம் மூட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இறைச்சி கடைக்காரர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அரசின் நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை கான்பூர் நகரில் ஒன்று திரண்ட இறைச்சி விற்பனையாளர்கள் அரசு பிறப்பித்த உத்தரவுகளை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News