செய்திகள்

யானை மிதித்து கல்லூரி மாணவி பலி: கர்நாடகாவில் பரிதாபம்

Published On 2017-03-24 08:19 GMT   |   Update On 2017-03-24 08:19 GMT
யானை மிதித்து கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்:

கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் பலபெட்டா பகுதியை சேர்ந்தவர் சபினா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் காமர்ஸ் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். அப்பகுதியில் உள்ள காபித்தோட்டம் வழியாக தினசரி சபினா கல்லூரி செல்வது வழக்கம்.

சம்பவ தினத்தன்று, வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற சபினாவை யானையொன்று திடீரென வழிமறித்துத் தாக்கியது. இதில் நிலைகுலைந்து போன சபினா தப்பிக்க வழியின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், சபினாவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



யானை தாக்குதல் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் “கடந்த வருடம் யானை தாக்கி 24 கூலித்தொழிலாளர்கள் இறந்துள்ளனர். ஆனால் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறை” என தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News