செய்திகள்
சச்சினை பின்பற்றுங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை
மாணவர்கள் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து உத்வேகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலியில் “மன் கி பாத்” (மனதின் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். இன்று வானொலியில் அவர் 28-வது முறையாக உரையாற்றினார்.
இந்நிலையில், தன்னுடைய இன்றைய உரையில் மாணவர்கள் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து உத்வேகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
ஒருவர் தனக்குள்ளாகவே போட்டியிட்டு கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் அல்ல. அதுதான் ஒரு மனிதன் மேம்படுவதற்கு நல்ல குணமுடையவராக மாறுவதற்கும் உதவி செய்யும்.
உதாரணத்திற்கு சச்சினை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தன்னுடைய துறையில் 20 வருடங்களுக்கு மேல் நீடித்து இருந்தார்.
ஒவ்வொரு நாளும் தனது சொந்த சாதனைகளையே அவர் முறியடித்து வந்தார். போட்டியிடுதல், மேம்படுத்திக் கொள்தல் ஆகியவற்றை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மோடி கூறினார்.