செய்திகள்

வேறொருவரின் பணம் ரூ.70 லட்சம் பெண்ணின் வங்கி கணக்கில் விழுந்தது: வீடு, மனை, கார் வாங்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி

Published On 2016-10-27 05:12 GMT   |   Update On 2016-10-27 05:12 GMT
வேறொருவரின் பணம் ரூ.70 லட்சம் பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக விழுந்த சம்பவம் அதிகாரிகளிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகரி:

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெண்ணமல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த ஏழைகளுக்கு மாதம் தோறும் வழங்குவதற்கான பென்சன் பணம் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் போடப்படும்.

அவர் பணத்தை எடுத்துச் சென்று உரியவர்களுக்கு பிரித்து வழங்குவார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.70 லட்சம் பணம் விழுந்தது. இதைப்பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதை தனது கணவரிடம் தெரிவித்தார். அவர்கள் பணம் விழுந்த தகவலை வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. மாறாக அந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தனர்.

பின்னர் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து 2 வீடுகள், 2 வீட்டுமனைகள், 1 ஏக்கர் விவசாய நிலம், 2 கார்கள் போன்றவற்றை வாங்கினார்கள். அதை ஜாலியாக அனுபவித்தனர்.

இந்த நிலையில் வேறொருவரின் வங்கி கணக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் ரூ.70 லட்சம் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் தவறுதலாக விழுந்தது தெரிய வந்தது. இதை அறிந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந் தனர்.

இதையடுத்து ஐதராபாத்தில் இருந்து வங்கி அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். அங்கு சென்று விசாரித்த போதுதான் அந்த பெண் பணத்தை எடுத்து வீடுகள், மனைகள், விவசாய நிலம், கார்கள் வாங்கியது தெரிய வந்தது. இதை அறிந்ததும் அதிகாரிகள் மீண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அந்த பெண் வீடுகள், மனைகள், விவசாய நிலம், கார்கள் ஆகியவற்றை விற்று எவ்வளவு வருகிறதோ அதை தருவதாக சம்மதித்துள்ளார். எப்போது நிலத்தை விற்பது எப்படி பணத்தை வசூலிப்பது, எப்படி வசூலித்தாலும் எவ்வளவு பணம் தேறும் என்று அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

Similar News