உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் கொலை: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சிகள்

Published On 2022-06-22 11:34 GMT   |   Update On 2022-06-22 11:34 GMT
  • காசி ராஜன் அரிவாளால் 3 பேரை தாக்குவதையும், அவர்கள் அரிவாளை பிடுங்கி காசிராஜனை வெட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
  • சொத்து பிரச்சினை காரணமாகத்தான் தமிழழகன் தனது மகனை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 55), விவசாயி. இவரது மகன் காசி ராஜன் (36), டிரைவர்.

தமிழழகன். காசி ராஜனின் மனைவியிடம் தவறாக நடந்ததாக ஒட்டப்பிடாரம் போலீசில் வழக்கு உள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் தமிழழகன் தனது மகனுக்கு சொத்துக்களை கொடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழழகன் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக நேற்று தனது உறவினர்களான ஒட்டப்பிடாரம் கடல்ராஜா (45), காசிதுரை (31) ஆகியோருடன் காரில் தூத்துக்குடி கோர்ட்டுக்கு வந்தார்.

கோர்ட்டு எதிரே காரை நிறுத்திவிட்டு கோர்ட்டுக்கு சென்றார். பின்னர் அவர் காருக்கு வந்த போது அங்கு வந்த காசி ராஜன் அரிவாளால் தமிழழகன், கடல் ராஜா, காசி துரை ஆகிய 3 பேரையும் தாக்கினார்.

சுதாரித்து கொண்ட அவர்கள் அரிவாளை பிடுங்கி காசி ராஜனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று தமிழழகன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

காசி ராஜன் தாக்கியதில் அவர்கள் 3 பேருக்கும் காயம் இருந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே காசி ராஜன் அரிவாளால் 3 பேரை தாக்குவதையும், அவர்கள் அரிவாளை பிடுங்கி காசிராஜனை வெட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தநிலையில் கைதான தமிழழகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சினை காரணமாகத்தான் தமிழழகன் தனது மகனை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News