உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி கடற்கரையில் காதலனை தாக்கி விரட்டிவிட்டு இளம்பெண் கற்பழிப்பு- வாலிபர்கள் வெறிச்செயல்

Published On 2023-09-07 05:36 GMT   |   Update On 2023-09-07 05:36 GMT
  • இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
  • வாலிபர்கள் 2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வருகின்றனர். காதலர்கள் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். நீண்ட நேரம் அங்கு பேசிக் கொண்டிருந்த இருவரும் பின்னர் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தென்பாகம் காவல் சரகத்திற்குட்பட்ட கடற்கரை பகுதிக்கு சென்றனர். இரவு 9.30 மணியை தாண்டியும் காதலர்கள் அங்கு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர்களிடம் சென்று பேச்சு கொடுத்தனர்.

இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் சேர்ந்து அந்த பெண்ணின் காதலனை தாக்கி விரட்டினர். இதனால் அவர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் வாலிபர்கள் 2 பேரும் அந்த இளம்பெண்ணை அருகில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கி சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணை ஏற்றி சென்று நடுரோட்டில் இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இது தொடர்பாக அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார். அவரை மீட்ட போலீசார் அவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து இந்த சம்பவத்தில் வாலிபர்கள் 2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News