உள்ளூர் செய்திகள்

மதுரையில் மயான தொழிலாளி அடித்துக்கொலை- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2022-08-22 08:55 GMT   |   Update On 2022-08-22 08:55 GMT
  • கொலை செய்யப்பட்டு கிடந்தவர் எஸ்.எஸ்.காலனி மாப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் என்பது கண்டறியப்பட்டது.
  • பொன்மேனி சுடுகாட்டில் மயானத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை.

மதுரை:

மதுரை ஜெய்நகரில் தனியார் பள்ளி அருகே முதியவர் ஒருவர் தலை சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ இரும்பு ஆயுதத்தால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் எஸ்.எஸ்.காலனி மாப்பாளையத்தை சேர்ந்த அய்யனார் (வயது 60) என்பது கண்டறியப்பட்டது. பொன்மேனி சுடுகாட்டில் மயானத்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை.

அவரை கொலை செய்தது யார்? என்பது கண்டுபிடிக்க சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று நள்ளிரவு அய்யனார் சம்பவ இடத்தில் நடந்து வருவது, அவரிடம் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் பீடி கேட்டு தகராறு செய்வது, அப்போது அந்த வாலிபர் அய்யனாரை தலையில் சுத்தியலால் சரமாரி தாக்குவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் அய்யனாரை அடித்து கொன்ற வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யனாரை கொன்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News