தக்காளி கிலோவுக்கு ரூ.40 ஆக அதிகரிப்பு
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது.
- இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து இருந்தன.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து இருந்தன.
இதனால் கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று மொத்த விற்பனை கடைகளில் ரூ.40-க்கு விற்கப்பட்டது.
வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை மீண்டும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறும் போது, 'கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே தக்காளி விலை 2 மடங்கு அதிகரித்து உள்ளது என்றார்.