search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koyambedu Market"

    • 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பழ மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்து வாழை மற்றும் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இந்த நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் கோயம்பேடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 5 மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் கலந்து மாம்பழம் மற்றும் வாழைத்தார்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 4 டன் மாம்பழம் மற்றும் 3 டன் வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை மார்க்கெட் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.

    சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடந்து வருகிறது.

    இதில் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின் போது கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் அனைவரும் ஓட்டு போடுவதற்கு செல்ல வசதியாக வருகிற 19-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்க்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை, பழம் மற்றும் உணவு தானிய வளாகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். எனினும் 19-ந்தேதி பூ மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    • தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது.
    • பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஆந்திராவில் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளன. வழக்கமாக தினசரி 550 லாரிகளில் வந்து குவிந்த காய்கறிகள் தற்போது 450 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் காய்கறி விலை வழக்கத்தை விட 10 சதவீதம் அதிகரித்து உள்ளன. பீன்ஸ், அவரைக்காய், கேரட் ஆகிய காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ100 வரை விற்பனை ஆகிறது. அதேபோல் ஊட்டி கேரட் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.

    • கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.

    • ஊட்டி கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் ஊட்டி கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனையில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது. அவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், பாகற்காய் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்பனை ஆகி வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் பீன்ஸ், கேரட் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்து உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    நள்ளிரவில் வழக்கம் போல விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது. வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அதேபோல் வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.90-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    தக்காளி-ரூ.15, நாசிக் வெங்காயம்-ரூ.20-ரூ.25வரை, ஆந்திரா வெங்காயம்-ரூ.12-ரூ.15வரை, சின்ன வெங்காயம்-ரூ.20-ரூ.40வரை, உருளைக்கிழங்கு-ரூ.22, உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, வரி கத்தரிக்காய்-ரூ.15, அவரைக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.25, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ70, மாலூர் கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, முட்டை கோஸ்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.80, பீர்க்கங்காய்-25, வெள்ளரிக்காய்-ரூ.15, புடலங்காய்-ரூ.15, காராமணி-ரூ.15, முள்ளங்கி-ரூ15, சவ்சவ்-ரூ.10, நூக்கல்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15, குடை மிளகாய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.25,பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.20, இஞ்சி-ரூ.90.

    • பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள்.
    • தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    தமிழகத்தில் தற்போது பனி சீசன் முடிந்து கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விட்டது. இதனால் சாலை ஓரங்களில் நீர் மோர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள் விற்பனை அதிக அளவில் முளைத்து உள்ளன.

    பகல்நே ரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள். தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    மேலும் சாலையோரங்களில் ஆங்காங்கே தற்போது வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனையும் அதிகரித்து உள்ளன. குவித்து வைத்து விற்கப்படும் தர்பூசணியை முழுபழங்களாகவும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களாகவே செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவியத் தொடங்கி உள்ளன.

    தற்போது தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்படுகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தர்பூசணி பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது.
    • சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, பூ மார்க்கெட்டுக்கு நிலக் கோட்டை, அருப்புக் கோட்டை, உசிலம்பட்டி, ஈரோடு, ஓசூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    இப்போது பனி சீசன் என்பதால் கடந்த 2 மாதங்களாகவே மல்லி, ஜாதி, முல்லை ஆகிய பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

    இந்நிலையில் அடுத்தடுத்து முகூர்த்த நாள் என்பதால் நேற்று அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

    இதனால் பூ விற்பனைகளை கட்டியது. வரத்து குறைந்து இருந்த நிலையில் தேவை அதிகரித்ததால் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் திடீரென உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை மல்லி ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ மல்லி ரூ.1500வரை விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளில் மல்லி விலை ரூ.2 ஆயிரத்துக்கு மேல் எகிறியது. கனகாம்பரம் ரூ.700-க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமந்தி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.150முதல் ரூ.200வரை விற்கப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை (கிலோவில்) வருமாறு:-

    சம்பங்கி-ரூ.100, அரளி-ரூ.150, ஜாதி-ரூ.800 சாமந்தி-ரூ.150, பன்னீர் ரோஜா-ரூ.100, சாக்லேட் ரோஜா-ரூ.120.

    • 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இன்று 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.

    ஊட்டி கேரட், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து உள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. தக்காளி ரூ40-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் மற்றும் இஞ்சி கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    • விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது.
    • 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை கோயம்போடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபகாலமாக சற்று விலை உயர்ந்தது.

    இந்நிலையில் பூண்டின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, நடப்பாண்டில் விளைச்சல் குறைந்துள்ளது.

    விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு விலை ஏற்றம் இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    ×