உள்ளூர் செய்திகள்
புளியங்குடி அருகே பா.ஜனதா கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய 4 பேர் மீது வழக்கு
- பா.ஜனதா கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
- தகவல் அறிந்த டி.என்.புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் அழகுதுரை புளியங்குடி போலீசில் புகார் அளித்தார்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டி.என். புதுக்குடியில் நகர பா.ஜனதா சார்பில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
அப்போது நகர செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அங்கிருந்த பா.ஜனதா கொடிக்கம்பத்தில் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினர். பின்னர் அந்த கொடிக்கு மரியாதை செலுத்திவிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. தகவல் அறிந்த டி.என்.புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் அழகுதுரை புளியங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நகர செயலாளர் உள்பட பா.ஜனதாவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.