ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் வெளியிடப்படும்- எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ.பி.எஸ். அணி மிரட்டல்
- ஜெயலலிதா நிதி தொடர்பாக பேச டெல்லி சென்ற போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்தை உடன் அழைத்து செல்வார்.
- பழனிசாமி ஒரு நாளும் ஓ.பி.எஸ்.சை அழைத்து செல்லவில்லை.
சென்னை:
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக 3 ஆக பிரித்து மாவட்ட செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்து உள்ளார். கட்சி வரலாறு தெரிந்தவர்கள் தங்கமணியால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட, பல காலமாக கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்கள் புதிய நிர்வாகிகளை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
அதை பார்த்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கவலையும், அச்சமும் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து தங்கமணி பொய்யான தகவல்களை பேசி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் சந்தித்தனர். அப்போது மீதம் இருக்கும் காலத்தில் பழனிசாமி முதல்வராக இருக்கட்டும், அடுத்த முதல்வர் நீங்கள்தான் என ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறியவர் தங்கமணி.
ஆட்சியை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் தீர்மானம் கொண்டு வந்த போது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவர்கள் நன்றியுடன் இருந்ததில்லை.
ஜெயலலிதா நிதி தொடர்பாக பேச டெல்லி சென்ற போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்தை உடன் அழைத்து செல்வார். ஆனால் பழனிசாமி ஒரு நாளும் ஓ.பி.எஸ்.சை அழைத்து செல்லவில்லை.
பிரதமர், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரையும் அழைத்தாலும், தனியாக சென்று சந்தித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. பல அவமானங்களை ஓ.பன்னீர் செல்வம் தாங்கிக் கொண்டிருந்தார். அவரை திட்டமிட்டு கட்சியில் இருந்து வெளியேற்றினார்.
விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் நடத்த உள்ளார். தொண்டர்கள் அவரது பக்கம் உள்ளனர். நீதி, நியாயம் என அனைத்தும் அவர் பக்கம் உள்ளன.
தங்களை காப்பாற்றிக் கொள்ள விரும்பும் சில பேர் இந்த கட்சியை கையில் வைத்திருப்பதன் மூலமாகத் தான் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நோக்கத்தில் ஒற்றை தலைமை என்ற உத்தியை பயன்படுத்துகின்றனர். ஒருவரை ஒதுக்கி வைத்து விட்டு தான் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கும் காரணத்தால் தான் இந்த கட்சி பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறது.
வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள், யார் தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள், யார் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதங்களில் தெரியவரும்.
நவம்பர் 21-ந்தேதிக்கு முன்பாகவே அந்த தகவல்கள் வெளிக்கொண்டு வரப்படும். ஓ.பி.எஸ். அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன். அப்போது வெட்ட வெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.