பொதுமக்களையும், விவசாய பயிர்களையும் பாதுகாக்க வேண்டும்- அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்வாய் பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8,000 நெல்மூட்டைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படாததால் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி விட்டது.
இது போன்ற நிலை அவ்வப்போது பல மாவட்டங்களில் ஏற்படுவதற்கு காரணம் என்ன? அதாவது நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும், பின்பு அதை அரசு எப்படி பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமோ அதை முறைப்படி மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு, மழை பெய்வதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்து விவசாயப் பயிர்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க முன்னேற்பாடான, முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.