6 கோவில்களில் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
- 6 கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
- பயிற்சி வகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கானொலி காட்சி வழியாக மாணவர்களுக்கான சேர்க்கை உத்தரவு மற்றும் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கி தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
தமிழக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் இன்று 6 இடங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம், திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் ஆலயம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி திருக்கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகிய 6 கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கானொலி காட்சி வழியாக மாணவர்களுக்கான சேர்க்கை உத்தரவு மற்றும் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கி தொடங்கி வைத்தார். இதையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையர் அன்புமணி, தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, அர்ச்சகர் பிரிவு எழுத்தர் ராமசாமி, இணை ஆணையர் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், விடுதி கண்காணிப்பாளர் சிவநாதன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ. ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.