- ராமநாதபுரம் மாவட்டத்தில் 727 பள்ளி வாகனங்கள் ஆய்வு கலெக்டர் தலைமையில் நடந்தது.
- வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சேக் முகம்மது, ஆய்வாளா்கள் செந்தில்குமாா், பத்மபிரியா, கேணிக்கரை போலீஸ் ஆய்வாளா் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை இணைந்து பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 727 பள்ளி வாகனங்கள் உள்ளது. அந்த வாகனங்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் நிறுத்தப்பட்டு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
இதில் வாகனங்களுடைய அவரச கால கதவு, வாகன இருக்கைகள், வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டியில் மருந்துகள், வாகனத்தின் படிக்கட்டுகள், வாகனத்தின் முன், பின் பள்ளி வாகனம் என்ற வாசகம், வாகனத்தின் பக்கவாட்டில் பள்ளியினுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண், சரக காவல் தொலைபேசி எண், வட்டாரப்போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண் எழுதப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு நடந்தது.
இந்த ஆய்வின் போது குறைபாடுகள் உடைய பள்ளி வாகனங்கள் கண்டறியப்பட்டு 15 வாகனங்கள் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதனை சரி செய்த பின்பு தான் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும்.
முன்னதாக பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கான சாலை விதிகள் குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.ஓட்டுநா்களுக்கான கண் சிகிச்சை முகாமையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தாா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சேக் முகம்மது, ஆய்வாளா்கள் செந்தில்குமாா், பத்மபிரியா, கேணிக்கரை போலீஸ் ஆய்வாளா் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனா்.