உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் சிறிய ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஆலோசனை

Published On 2022-09-30 10:07 GMT   |   Update On 2022-09-30 10:07 GMT
  • குமாரபாளையத்தில் சிட்ரா சார்பில் சிறிய ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஆலோசனை கூட்டம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • 50 சதவீதம் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் எனும் வகையில் மானியம் வழங்கப்படும்.

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் சிட்ரா சார்பில் சிறிய ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஆலோசனை கூட்டம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மண்டல, துணி நூல் துறை, மண்டல இயக்குனர் அம்சவேணி, நாமக்கல் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் பங்கேற்று ஜவுளி பூங்கா அமைவதற்கான விபரங்களை எடுத்துரைத்தனர்.

அப்போது சேலம் மண்டல, துணி நூல் துறை, இயக்குனர் அம்சவேணி பேசியதாவது:

சிறிய அளவிலான ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக முதல்வர் 2015ல் அறிவித்தார். இதில் உள் கட்டமைப்பு செலவினம், பொது வசதி மையம் அமைத்தல், தொழிற்கூடம் கட்டுமான செலவு இவற்றிற்கு 50 சதவீதம் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் எனும் வகையில் மானியம் வழங்கப்படும். இடம், உள் கட்டமைப்பு, பொது வசதி மையம் அமைத்தல், தொழிற்கூடம் கட்டுமானம், மற்றும் இயந்திரம் ஆகிய 5 இனங்கள் உள்ளது. 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 3 தொழில் முனைவோர் பங்கேற்கும் 3 தொழிற்கூடங்களாவது இதில் பங்கேற்க வேண்டும்.

பொது கிளஸ்டர் அமைப்பில் இது வரும். மாநில அரசு, மானிய தொகைகளை மூன்று தருணங்களில் விடுவிக்கிறார்கள். குறைந்த பட்சம் 50 பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் அதிகம் உள்ளதால், இங்குள்ள தொழில் முனைவோரை இதில் பங்கேற்க செய்திட, அதிக விண்ணப்பங்கள் பெற்றிட முயற்சி செய்யும் விதமாக இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம். இப்பகுதி–யில் நிறைய விண்ணப்பங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் குமாரபாளையம் சிட்ரா விசைத்தறி பணி மையம் (பொ) அதிகாரி பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். தொழில் முனைவோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News