ராதாபுரம் அருகே கல்குவாரி அமைக்க ஏற்பாடு- விவசாயிகள் எதிர்ப்பு
- குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- குளம் அருகே ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.
பணகுடி:
ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உதயத்தூர் கிராமத்தில் ஆத்துகுறிச்சி குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 42 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
புதிய கல்குவாரி
இந்த குளம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அந்த குளத்தின் அருகே தனியார் நிறுவனம் ஒன்று கல்குவாரி அமைக்க அரசிடம் மனு அளித்துள்ளது.
இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில், குளம் அருகே ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.
விவசாயிகள் எதிர்ப்பு
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு அவர்களுடைய குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே ராதாபுரம் தொகுதிக்கு நீர் ஆதாரமாக திகழும் ஆத்துகுறிச்சி குளத்தில் கல்குவாரி அமைக்க கூடாது என்று பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.