உள்ளூர் செய்திகள்

சோமனூரில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல்

Published On 2022-12-18 08:44 GMT   |   Update On 2022-12-18 08:44 GMT
  • 14-ந் தேதி டாஸ்மாக் கடை திடீரென திறக்கப்பட்டது.
  • இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சூலூர்,

கோவை மாவட்டம்,சோமனூரில் சவுடேஸ்வரி காலனி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 14-ந் தேதி டாஸ்மாக் கடை திடீரென திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் சோமனூர் தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுக்கடையை மூடக்கோரி கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், சோமனூர் பகுதியில் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மசூதியும், நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளும், நொய்யல் ஆறும் அமைந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், குற்றங்கள் அதிகம் நடக்க வாய்ப்பாக அமையும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பிறகு சமரசம் அடைந்த அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News