சென்னையில் நேற்று ஒரே நாளில் 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்பாடு- அமைச்சர் தகவல்
- கடந்த மே 16-ந்தேதி அன்று சென்னையின் உச்சபட்ச மின்சார தேவை 4,016 மெகாவாட் ஆகும்
- சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
கோடை வெப்பம் இன்னும் முழுமையாக குறையாததால் ஒவ்வொரு வீடுகளிலும் மின்விசிறி மற்றும் ஏ.சி. அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இதன் காரணமாக இரவில் மின்சார பயன்பாடு மிக அதிகமாக உள்ளது.
கடந்த மே 16-ந்தேதி அன்று சென்னையின் உச்சபட்ச மின்சார தேவை 4,016 மெகாவாட் ஆகும். இது தடையின்றி மக்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது 9.03 கோடி யூனிட் மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 2-ந்தேதி 9.06 கோடி யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்பட்டது. இது அப்போது சாதனையாக கருதப்பட்டது.
ஆனால் அதையும் தாண்டி சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
முதன்முறையாக சென்னையில் நேற்று (8-ந்தேதி) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்கலுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.