கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம்
- மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது.
- பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
மதுரை
மதுரையின் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் கூடலழகர் பெருமாள் கோவிலும் ஒன்று. இது 47-வது வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.
கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 10 நாள் திருவிழா, கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் மாலை நேரங்களில் சுவாமி சிம்மம், அனுமான், கருடன், சேஷ, யானை, தங்க சிவிகை, பூச்சப்பரம், குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.
பிரமோற்சவ திருவிழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இன்று காலை கோவில் தேர்முட்டியில் இருந்து அதிகாலை 6.15 மணிக்கு புறப்பட்ட தேர், தெற்கு வெளிவீதி வழியாக சென்று திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி வழியாக வந்து காலை 8.30 மணி அளவில் மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். இதற்காக அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.