உள்ளூர் செய்திகள்

செல்போன்கள் திருடிய ஓட்டல் ஊழியர் உள்பட 4 பேர் கைது

Published On 2022-08-29 08:27 GMT   |   Update On 2022-08-29 08:27 GMT
  • செல்போன்கள் திருடிய ஓட்டல் ஊழியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடம் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் செல்போன் திருட்டு தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் ஒரு கும்பல் யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், மீனாட்சி கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், விளக்குத்தூண் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம்10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் காக்கா தோப்பு, தலைவிரிச்சான் சந்து கண்ணன் (40), சின்னகண்மாய் பாலகுரு (31), ராமநாதபுரம் மறவகுடி சுதாகர் (36), மதுரை பைபாஸ் ரோடு ஓட்டல் ஊழியர் சிராஜ் அலி (25) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கண்ணன் பாலகுரு ஆகியோர் கூறுகையில், குடிபோதையில் தூங்குவோர், மூதாட்டிகள் மற்றும் இளம் பெண்களிடம் செல்போனை பறிப்போம். அதனை ராமநாதபுரம் மறவகுடி சுதாகர், ஓட்டல் ஊழியர் சிராஜ் அலி ஆகியோரிடம் கொடுப்போம். அவர்கள் இதனை விற்று பணமாக்கி கொடுப்பார்கள். இதற்காக நாங்கள் 2 பேருக்கும் பெருமளவில் கமிஷன் தொகை கொடுத்து வந்தோம்" என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News