- தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மாயழகு (வயது 42), கூலித்தொழிலாளி. இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதில் விரக்தியடைந்த மாயழகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளாச்சேரி மொட்டைமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துப்பாண்டி வீட்டருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடல்புதூர் ஆபீசர் டவுன் 9-வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (45). மன அழுத்தத்தில் இருந்த இவர் சம்பவத்தன்று ஆசிட் குடித்தார். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.