உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

Published On 2022-07-19 09:14 GMT   |   Update On 2022-07-19 09:14 GMT
  • கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவரை அவரது மகன் செல்வராஜ் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
  • இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் போலீஸ் சரகம் ஊத்தன்குளத்தை சேர்ந்தவர் மாடப்ப தேவர் (வயது 65). விவசாயி.

இவரது மகன் செல்வராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது தந்தையிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மாடப்ப தேவர் ஊர் அருகில் உள்ள தோட்டத்தில் மாடுகளை தொழுவத்தில் அடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கி கொலை செய்தார்.

இச்சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தீர்ப்பு கூறினார். அப்போது செல்வராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார்.

Tags:    

Similar News