உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தலைமையில் நெல்லை நீர் வளம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

தாமிரபரணி நதியை பாதுகாக்கும் பொருட்டு நெல்லை நீர் வளம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி

Published On 2022-09-17 09:50 GMT   |   Update On 2022-09-17 09:50 GMT
  • நீர் வளம் பாதுகாத்தல் குறித்தும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • சமூக நீதி நாள் உறுதி மொழி மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் எடுக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நெல்லை நீர் வளம் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் 250 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். தாமிரபரணி நதியினை தூய்மையாக பாதுகாப்பது குறித்தும் நீர் வளம் பாதுகாத்தல் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு பொருநை நதி குறித்து கையேட்டினை வெளியிட்டு பேசியதாவது:-

தாமிரபரணி நதி நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது. அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்கிறது. நமக்கு வரப்பிரசாதமாக உள்ள தாமிரபரணி தண்ணீரை குளிக்கும் தரத்திலிருந்து குடிக்கும் தரத்திற்கு கொண்டுவருவது உங்கள் கடமை.

அனைத்து தரப்பு மக்களிடமும் நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி நதியினை தூய்மைபடுத்த முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும். தண்ணீரின் அருமையை அறிந்து பொருநை எனது பெருமை என்ற நோக்கத்தோடு தன்னார்வலர்கள் தங்கள் பணியை விரிவுபடுத்தி சிறப்பாக பணிசெய்து பழமை மாறாமல் தாமிரபரணியை மீட்டு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சதக்கத்துல்லா கல்லூரி தமிழ்துறை தலைவர் சவுந்தர மகாதேவன், பரமகல்யாணி கல்லூரி வில்வநாதன் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள். மேலும் நீரை பராமரிப்பது குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும் சமூக நீதி நாள் உறுதி மொழி மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், மேலாளர் வெங்கடாசலம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், தன்னார்வலர்கள் பிராஜிதா, நிஷா, திருநிலேக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News