உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் இன்று காலை தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
- தனியார் நிதி நிறுவனத்தில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்தநிலையில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி நிதி நிறுவனத்தில் இருந்த யு.பி.எஸ்., கம்ப்யூட்டர் உள்பட பல்வேறு பொருட்களில் பற்றி எரிந்தது. அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.