தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு
- ராஜதுரைக்கும் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
- இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜதுரை தனது வீட்டு அருகே நின்றிருந்த போது அங்கு வந்த சுரேசுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 60). இவர் ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலராக 2 முறை பதவி வகித்தவர்.
தற்போது வார்டு வரையறையின் படி இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது மனைவி அன்னக்கிளியை இத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தார்.
ராஜதுரைக்கும் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் (40)என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜதுரை தனது வீட்டு அருகே நின்றிருந்த போது அங்கு வந்த சுரேசுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜதுரையை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேசை தேடி வருகின்றனர்.