பரமத்தி வட்டார வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்
- பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவரை கொலை மிரட்டல் விடுத்த லாரி உரிமையாளருக்கு வலைவீச்சு.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பரமத்தியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லட்சுமி. இவர் கடந்த மே மாதம் 6-ந் தேதி கபிலர் மலை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அனுமதியின்றி கிராவல்மண் ஏற்றிவந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் கபிலர்மலை அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் (வயது48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கவேல் கபிலர்மலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் லட்சுமியின் வீட்டிற்கு சென்று எனது லாரியை எப்படி பறிமுதல் செய்யலாம் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து வருவாய் ஆய்வாளர் லட்சுமி ஜேடர்பாளையம் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கவேலை தேடி வருகின்றனர்.