உள்ளூர் செய்திகள்

புளியங்குடி முதியவர் கொலையில் கைதான மகன் வாக்குமூலம்

Published On 2022-07-08 08:59 GMT   |   Update On 2022-07-08 08:59 GMT
  • குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்து கருப்பையா கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
  • பணம் மற்றும் சொத்தை எழுதி தருமாறு தந்தையிடம் கேட்டு வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும் செவல் பச்சேரி மடத்து தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இவரது மனைவி காளியம்மாள், இவர்களுக்கு 2 மகள்களும், முத்துக்குமார் என்ற மகனும் உள்ளார். இரு மகள்களுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்து கருப்பையா கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று கருப்பையா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமார் தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முத்துக்குமார் கூறியதாவது:-

சொத்து பிரச்சினை தொடர்பாக எனக்கும், எனது தந்தைக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. நான் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால் பணம் மற்றும் சொத்தை எழுதி தருமாறு தந்தையிடம் கேட்டு வந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்.

இதேபோல் சம்பவத்தன்று அவரிடம் சொத்துக்களை எழுதி தருமாறு கூறினேன். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News