கோவை காந்திபுரத்தில் வீடு புகுந்து பிசியோதெரபி டாக்டர் மீது தாக்குதல்
- மனைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பேரும் சேர்ந்து என்னை தாக்கி வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
குனியமுத்தூர்;
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பதிவாளர் காலனியை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 39). இவர் போத்தனூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்ட் டாக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கும் ஷீலா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான 3 மாதத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் என்னை பிரிந்து அவரது வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் அவரது உறவினர் வந்து எனது மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறினர். இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.
சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்த போது எனது மனைவி ஷீலா, அவரது சகோதரர் கவின், தந்தை வாசிங்டன் ஆகியோர் வந்தனர். அப்போது எங்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த மோதிரம், கைசெயின், செயின் உள்பட 6 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் டாக்டரின் மனைவி ஷீலா, சகோதரர் கவின், தந்தை வாசிங்டன் ஆகியோர் மீது தாக்குதல், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.