உள்ளூர் செய்திகள்
திருமூர்த்திமலையில் சாரல் மழை - பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
தளி:
உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகின்றது. அதில் குளித்து மகிழ்வதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். ஆனால் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக அருவியில் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அனைவரும் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. அதுமட்டுமின்றி வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் நிலவியது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.