உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே கார் மீது லோடு ஆட்டோ மோதி வாலிபர் பலி
நெல்லை அருகே கோவிலுக்கு வந்த போது கார் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியக்காம் பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது35).
இவர் தனது உறவினரான சுப்பு (50) மற்றும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் நேற்று இரவு புறப்பட்டு வந்தார். காரை சத்தியமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (30) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள பாப்பாங்குளம் விலக்கு அருகே வந்த போது சிறுநீர் கழிப்பதற்காக சாலையோரத்தில் காரை நிறுத்தி உள்ளனர்.
டிரைவர் முருகேசனும், மற்றொருவரும் காரில் இருந்து இறங்கி காட்டு பகுதிக்குள் சென்றுள்ளனர். லோகநாதன் காரின் பின்புற இருக்கையிலும், சுப்பு டிரைவர் அருகே உள்ள இருக்கையிலும் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த மினி லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் லோகநாதன் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சுப்புவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயம் அடைந்த சுப்புவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக மினி லோடு ஆட்டோ டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் முக்காணியை சேர்ந்த முத்துமாலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.