உள்ளூர் செய்திகள்
குப்பைகளால் நிறைந்து வரும் குடமுருட்டி ஆறு
வலங்கைமான் பகுதியில் உள்ள குடமுருட்டி ஆறு குப்பைகளால் நிறைந்து வருவதால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகரின் முக்கிய பகுதியாக உள்ள குடமுருட்டி ஆற்றில் நாளுக்கு நாள் குப்பை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் குடமுருட்டி ஆறு குப்பை மேடாக மாறிவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அருகிலுள்ள டாஸ்மாக் கடையிலிருந்து மது வாங்கி வரும் மதுபிரியர்கள் மதுவை அருந்திவிட்டு, காலியான கப்புகள், பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்வதால் மேலும் குப்பை சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்ததுள்ளது.
இதனால் ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்போது தண்ணீர் சீராக செல்ல முடியாமல் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் தடையாக இருக்கும். ஆகவே, பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.