உள்ளூர் செய்திகள்
கொலை

பொன்னேரி-மீஞ்சூர் 2 ரவுடிகள் வெட்டிக் கொலை

Published On 2022-05-09 06:45 GMT   |   Update On 2022-05-09 06:45 GMT
பொன்னேரி, மீஞ்சூரில் 2 ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரி:

பொன்னேரி, மீஞ்சூரில் 2 ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

மீஞ்சூரை அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40) ரவுடி. இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன.

மூர்த்தி திருவெள்ளவாயல் பகுதியில் பார் நடத்தி வந்தார். இன்று காலை அவர் பாரில் இருந்தார்.

அப்போது 7 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் மூர்த்தி தப்பி ஓட முயன்றார்.

ஆனால் அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கொலை நடந்த போது பாரில் சிலர் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் கொலையை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் காட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பார் எடுப்பது தொடர்பாக வல்லூரை சேர்ந்த ஒருவருடன் மூர்த்திக்கு தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையுண்ட மூர்த்திக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம், பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜவகர் (வயது 31). ரவுடி. நேற்று இரவு அவர் உறவினர் சீகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பள்ளம் பகுதியில் வந்தபோது 4 பேர் கும்பல் திடீரென அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜவகர் பரிதாபமாக இறந்தார். சீகனுக்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்தும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த சீகன் சென்னை ஸ்டாலின் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கஞ்சா, நாட்டுத்துப்பாக்கி வைத்திந்த வழக்கில் ஜவகரை போலீசார் தேடிவந்தனர். அவரது நண்பர் கார்த்திக் என்பவர் சிக்கி இருந்தார்.

இந்த நிலையில் ஜவகரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். அவர் மீது 2 கொலை வழக்கு, கஞ்சா வழக்குகள் உள்ளன.

ஜவகரின் கூட்டாளிகளில் ஒருவன் திருந்தி வாழ்வதாக போலீசில் எழுதிக் கொடுத்துள்ளார். அவருக்கும், ஜவகருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே இந்த தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொலை நடந்த இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், டி.எஸ்.பி.சாரதி, இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News