உள்ளூர் செய்திகள்
தச்சநல்லூர் நெல்லையப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
தச்சநல்லூர் நெல்லையப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மறுநாள் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து 1-ந்தேதி திருவாசகம் முற்றோதுதல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை புணர்பூச நட்சத்திரத்தில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
இதில் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆங்காங்கே பக்தர்கள் சார்பில் வெயிலுக்கு இதமாக மோர் உள்ளிட்ட நீராகாரங்கள் வழங்கப்பட்டது.அதன் பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது.
நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயகுமாரி, கோவில் நிர்வாக அலுவலர் சிவ சுந்தரேசன், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.